Monday, February 28, 2011

நான் விடைபெற்றுக் கிளம்பிய பொழுது

இரவில் உறங்கும் குளத்தில்
ஒரு பூவின் இதழ் விழுந்து
நிலவின் தெளிந்த பிம்பத்தைக்  
கலைத்துச் சேர்ப்பது போல்

உள்ளங்கைகள் உரசிய கணத்தில்

கலைந்து சேர்ந்திருக்கும் நமது ரேகைகள்
அநேகமாய் உனது எனதாகவும்
எனது உனதாகவும் மாறிப்பதிந்திருக்கும்

இமைத்தல் நிறுத்தி விழிகள் நான்கும்
இணைந்து மீண்ட ஓர் உபகணத்தில்
மெல்லிசை யொன்று மிதந்து
வானமெங்கும் பரவியிருக்கும்

நான் விடைபெற்றுக் கிளம்பிய பொழுதில்
என்னோடு சேர்ந்து உன் கனாக்களும்
பறந்து வானத்தில் மறைந்திருக்கும்
வினாக்கள் உன்னோடு வீடு சேர்ந்திருக்கும்

விளக்கணைத்து வீடுறங்க, ஊருறங்க,

ஊருடன் சேர்ந்து யாவும் உறங்க
மல்லிகையும் மலர்ந்து ஓய்ந்த அந்நள்ளிரவில்  
வாசற்படியில் வான்வெளியில் வெண்ணிலவில்
என் நினைவு தோன்றுமோ(டி)?

காத்திருக்கும் தருணங்களில் கடிகாரத்தில் இருந்து
எத்தனை நொடிகள் தெறித்து மாய்ந்திருக்கும்!
நான் இன்றி எத்தனை தினங்கள்
மேற்கே சாய்ந்திருக்கும்!

நீ தொடுவதில் உயிர்ப்பதெல்லாம் நான்!
மல்லிகை சூடினால் மணப்பதும் நான்!
மாடத்தில் நின்று வானத்தைப் பார்த்தால்
விரிவதெல்லாம் என் வரிகளே

அடை மழைக் காலங்களில்
உன் நெடும் பயணம் யாவிலும்
ஜன்னல் கம்பியில் வடியும் துளியிலும்
உடன் இருப்பேன்

என் நினைவில் உருகி நடக்கையில்
ஓர் அலைவந்து உன் பாதச் சுவடு வாசித்துப் போகும்
அதை வாங்கிக் கடல் முழுதும்
கவிதை பாடிக் காதல் செய்யும் மீன்கள்

தீர்த்தக் கரை வற்றி தெற்கு மூலை தேய்ந்து

செண்பகத்தோட்டம் காய்ந்திருக்கும்
என்றபோதும் காத்திருந்து ஓய்ந்துவிடப் போவதில்லை
வெண்ணிலாவில் ஏறி
வந்திறங்கு பார்த்திருப்பேன்.

No comments:

Post a Comment