Saturday, February 15, 2014

- கபிலர், குறுந்தொகை - 361

#தங்கத்தமிழ் , #Arivumathi , Trotsky MarudhuVikatan EMagazine

- கபிலர், குறுந்தொகை - 361

"............... அவர்மலை
மாலைப் பெய்த மணங்கமழ் உந்தியொடு
காலை வந்த காந்தள் முழுமுதல்
மெல்லிலை குழைய முயங்கலும்
இல்லுய்த்து நடுதலுங் கடியா தோளே"

(குறிஞ்சித் திணை - தலைவி கூற்று)

---

இவளது 'காதல்காரன்’ கொஞ்சம் தூரத்திலிருக்கிறான்.

எவ்வளவு தூரத்திலா..?

நேற்று மாலை அவனது மலையில் பெய்த மழை
இன்று காலை இவளது ஊரின் வழியே
வெள்ளமாய் வந்து கடந்து போகும்
தூரத்தில்.

அந்த வெள்ளம் பார்க்கத்தான்
வந்தாள் இவள்.

அவ்வப்போது வந்து வந்து உயிர் நசுங்க நசுங்க
அணைத்துப்போன அந்த வால் பயலின் நினைவு
உணர்ச்சி வெள்ளமாய்ப் பெருகி
இவளை
உடைக்க முயன்ற நொடியில்...

அதோ...
அந்த வெள்ளத்தில்
அவன் மிதந்து வருவதைப்
பார்த்துவிட்டாள்.

விடுவாளா?

ஓடிப்போய்... இழுத்துப்போகும் வெள்ளத்திடமிருந்து
அவனைப் பிடுங்கிக் கொண்டுவந்து
இறுகத் தழுவித் தழுவித் தழுவி
முத்தமிட்டு முத்தமிட்டு
மூர்ச்சையுறும் நேரத்தில்

உற்றுப் பார்த்தாள். பார்த்தால்...
அவனா... அவனா அது... இல்லை... இல்லை.
வேரோடும் பூவோடும்
வெள்ளம் பிடுங்கிவந்த அவனது மலையின்
ஒரு காந்தள் செடி!

அவனாய்... அதை
அவள் தழுவிய தழுவலில்...
அவனது ஆடைகளின் கசங்கல்களாய்
அதன் மெல்லிய இலைகள்
குழைந்துவிட்டன.

அதன் பிறகும்... அவனையே
வீட்டிற்கும் அழைத்து வருவதாய்
அந்தக் கார்த்திகைச் செடியை
துணிச்சலாய் அவள்
எடுத்து வந்தாள்.

அதன் கிழங்கை
அம்மா பார்க்கப் பார்க்கவே
வீட்டின் முன்
நட்டுவைத்தாள்.

அந்தக் கிழங்கு... தலைவனின் நம்பிக்கையாய்
முட்டிமோதி முளைத்துச்
செடியாகும்.

செடி
அரும்பு வைத்துப்
பூக்கும்.

அம்மா... அந்தப் பூவை வெறும்
காந்தள் பூவாகத்தான்
பார்ப்பாள்

இந்தக் காதல்காரியோ... அந்தப் பூவை
காதலனின் முகமாய்ப்
பார்ப்பாள்.

பார்க்கட்டுமே!

தமிழுரை - அறிவுமதி
எழிலுரை - டிராட்ஸ்கி மருது.

No comments:

Post a Comment